மட்டக்களப்பில் 77 வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை – ஏழு வர்த்தக நிலையங்கள் மீது வழக்கு தாக்கல்.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவுகளில் அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைகள் அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைவில் 77 வர்த்தக நிலையங்கள் மீது தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தேடுதலின் போது மோசடியான முறையில் தராசுகளை முத்திரையிடாமல் மற்றும் பழுதடைந்த நிலையில் வைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஏழு வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் பிரிவின் கண்காணிப்பாளர் வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலில் மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தினர் சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது முத்திரையிடாமல் தராசுகளை பாவித்து விற்பனை செய்த ஆறு வர்த்தகர்களும், பழுதடைந்த தராசினை பாவித்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு வர்த்தகருமாக ஏழு வர்த்தர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுச்சந்தைகள், வங்கிகள், நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் மற்றும் பல சரக்கு கடைகள் என 77 வர்த்தக நிலையங்கள் இதன் போது அதிகாரிகளினால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




