அம்பியூலன்ஸ் மோதி முச்சக்கர வண்டி சாரதி பலி.!!!
குளியாப்பிட்டிய – குருணாகல் பிரதான வீதியின் லபுயாய பகுதியில் நேற்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியூலன்ஸ் வண்டி, உயிராபத்தான நிலையில் இருந்த நோயாளி ஒருவரை மருத்துவக் குழுவினருடன் குருணாகல் வைத்தியசாலைக்கு அவசரமாக கொண்டு சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வேகமாக சென்ற அம்பியூலன்ஸ் வண்டி முச்சக்கர வண்டியுடன் மோதியதில், முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்ததுடன் அதன் சாரதி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் மாவனல்லை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் காலணி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் அம்பியூலன்ஸ் சாரதி மற்றும் அதில் பயணித்த மருத்துவ பணியாளர்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பியூலன்ஸில் இருந்த நோயாளி உடனடியாக மற்றொரு அம்பியூலன்ஸ் மூலம் குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

