ஈஸ்டர் ஞாயிறை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பொலிஸ் மா அதிபர் விசேட உத்தரவு.!!!
இன்று நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் உயிர்ப்புப் பெருவிழா (ஈஸ்டர் ஞாயிறு) கொண்டாடும் நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழங்கிய விசேட அறிவுறுத்தல்களின் அடிப்படையில், காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து தேவாலயங்களைச் சூழ்ந்த பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக, நாட்டின் அனைத்து காவல் நிலையங்களுக்கும் விசேட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் அதிகளவில் கூடும் தேவாலயங்களை அடையாளம் கண்டு அங்கு மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அமைந்துள்ள பிரதான தேவாலயங்களில் ஆயுதம் ஏந்திய பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இப்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், ஈஸ்டர் வார இறுதி மற்றும் தாக்குதல்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நிலவும் உணர்வுப்பூர்வமான சூழலை கருத்தில் கொண்டு, பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவினர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.