மட்டக்களப்பு குருதி தட்டுப்பாட்டை சமன் செய்ய – காத்தான்குடியில் ஜம்இய்யதுல் உலமாவின் மாபெரும் இரத்ததான முகாம்.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளையின் சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் இரத்ததான முகாம் இன்று (16) காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது.
ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளைத் தலைவர் அஷ்ஷேய்க் ஏ.எம். ஹாறூன் (ரஷாதி) தலைமையில் இடம்பெற்ற இம்முகாமில், தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜாபிர் பிரதம அதிதியாக பங்கேற்றார்.
மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவும் குருதித் தட்டுப்பாட்டை சமன்படுத்தும் நோக்கில் இம்முகாம் நடத்தப்பட்டதாக சமூக சேவைப் பிரிவு தெரிவித்தது. இவ் இரத்ததான முகாமில் அதிகளவிலான தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குருதிக்கொடையினை வழங்கினர்.
நிகழ்வில் வைத்தியசாலை குருதி வங்கி பொறுப்பாளர் வைத்தியர் திருமதி அலிமா ரஹ்மான், வைத்தியர் ஜே. நித்தியநந்தனா, ஜம்இய்யதுல் உலமா நிர்வாகிகள், உறுப்பினர்கள், இரத்த கொடையாளர்கள் சம்மேளன உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.















