தொழில்முனைப்பு திறன்களை ஊக்குவிக்க – மட்டக்களப்பில் 2025 உலக தொழில் முனைவோர் வாரம் ஆரம்பம்.!!!
உலகளாவிய தொழில் முனைவோர் வாரம் 2025 இன் பிரதான தேசிய நிகழ்வு இன்று காலை பிரதமரின் தலைமையில் நாடு பூராகவும் ஒரே நேரத்தில் நேரடி ஒளிபரப்புடன் ஆரம்பிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட நிகழ்வு பழைய மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் மாவட்ட மேற்பார்வை உத்தியோகத்தர் சி. விநோத் ஒருங்கிணைப்பில், மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி சுதர்ஷனி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என். தனஞ்ஜெயன் உள்ளிட்ட பல மாவட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
அரசாங்கம், தொழில் முனைவோரின் சந்தை வசதி, பொருளாதார ஏற்றுமதி வழிகாட்டல், 200 நாடுகளில் உள்ள சர்வதேச முதலீட்டாளர்களுடன் இணைப்பு ஏற்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒரு வார காலத்திற்கு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த தொழில் முனைவோரின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட விற்பனைக் கண்காட்சியை மாவட்ட அரசாங்க அதிபர் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து தொழில் முனைவோருக்கான முயற்சியாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கும் இடம்பெற்றது.
சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு (SED), தேசிய தொழில் முயற்சி அதிகார சபை (NEDA), ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை (EDB), விதாதா (VIDATHA), பிராந்திய புடவை கைத்தொழில் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டது சிறப்புக் குறிப்பாகும்.
























