ஜனாதிபதி தலைமையில் – டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2025 முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்.!!!
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று (11) டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வளாகத்தில், ஜனாதிபதியும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சருமான அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில், அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களான இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL), ஆட்பதிவுத் திணைக்களம் (DRP) மற்றும் GovTech (Pvt) Ltd ஆகியவற்றின் டிஜிட்டல் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான எதிர்கால செயற்பாடுகள், நடைமுறையில் உள்ள தடைகள் மற்றும் அவற்றை சரிசெய்வதற்கான கொள்கை மற்றும் நிர்வாக முடிவுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
ஜனாதிபதி, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மையக் காரணியாக உள்ள டிஜிட்டல் பொருளாதாரத்துடன் தொடர்புபட்ட அரச முதலீடுகளுக்கு வலுவான அடித்தளத்தை அமைப்பது அவசியம் என வலியுறுத்தினார்.
மேலும், நாடு முழுவதும் தொலைத்தொடர்பு கோபுரங்கள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை பங்கேற்பாளர்களுக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், “கிராமத்துக்கு தொடர்பாடல்” திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் 500 கோபுரங்களை நிறுவும் இலக்கு குறித்து விவாதிக்கப்பட்டதுடன், அந்த திட்டத்தை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இதேவேளை, தேசிய அடையாள அட்டைகள் வழங்குவதில் நிலவும் தாமதத்தை துரிதமாக சரிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், இலங்கைக்கே உரிய டிஜிட்டல் அடையாள அட்டை (SLUDI) திட்டத்தை விரைவுபடுத்துதல், அமைச்சின் நிர்வாக மற்றும் செயற்பாட்டு கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், புதிய டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபை அமைத்தல் மற்றும் வலுவான டிஜிட்டல் பொருளாதாரத்திற்குத் தேவையான மனிதவள மேம்பாடு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, அமைச்சின் செயலாளர் (பதில்) வருண ஸ்ரீ தனபால, ஜனாதிபதியின் டிஜிட்டல் ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய ஆகியோர் உட்பட பல சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் பங்கேற்றனர்.






