மின்சாரக் கட்டணம் உயருமா? ஏப்ரல் 1ல் முக்கிய அறிவிப்பு.!!!
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதி அறிவிக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து கருத்து வெளியிடுகையில், உலக சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு மின்சாரக் கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் விருப்பமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாத நிலவரங்களின் அடிப்படையில் மின்சாரக் கட்டணத்தை 13 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாகவும், இதுகுறித்த இறுதி முடிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏப்ரல் 1ஆம் திகதி அறிவிக்கும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்ததாவது, எதிர்வரும் மார்ச் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பல் வராததால், இம்மாதம் 25ஆம் திகதி வரை மட்டுமே சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றார்.
இதன் காரணமாக மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் மற்றும் நெப்தா பற்றாக்குறை ஏற்படும் என்றும், இது பாரிய சவாலாக மாறும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், ஏப்ரல் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் எரிபொருள் கப்பல் ஒன்று வரவுள்ளதாகவும், ஆனால் நெப்தா கிடைக்காத காரணத்தால் டீசலை மாற்று எரிபொருளாக பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த நெருக்கடியை சமாளிக்க இரவு நேரங்களில் டீசல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் நிலையில், பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், தேவையற்ற விளக்குகளை அணைப்பதன் மூலம் ஒத்துழைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையால் பொதுமக்கள் சில தியாகங்களை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.