உலக பாரிசவாத தினத்தையொட்டி – விழிப்புணர்வு நிகழ்வு.!!!
(கல்முனை செய்தியாளர்)
உலக பாரிசவாத தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29ஆம் திகதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கல்முனை பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவு ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நிகழ்வு இன்று (29) இடம்பெற்றது.
இந்நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் “ஒவ்வொரு நிமிடமும் பெறுமதியானது” எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்கள், கல்முனை பிரதேச செயலக அதிகாரிகள், கல்முனை வடக்கு மற்றும் தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை தாதியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் தனியார் தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக ஆரம்பமான இவ்விழிப்புணர்வு நிகழ்வில் சைக்கிள் ஓட்டம், நடைபவனி, தொங்கோட்டம் மற்றும் துண்டுப்பிரசுர விநியோகம் உள்ளிட்டவை இடம்பெற்றன.
இப்பேரணி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையை கடந்து அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையை அடைந்து மீண்டும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நிறைவடைந்தது.
இந்நிகழ்வை பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.எம்.எஸ். இர்ஷாட் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.














