மத்திய கிழக்கு போர் சூழலில் இலங்கைக்கு ரஷ்யாவின் 7.5 பில்லியன் டாலர் எரிபொருள் உதவி: முஸ்லிம் இளைஞர் மன்றம் பாராட்டு.!!!
-கல்முனை செய்தியாளர்-
அமெரிக்க, இஸ்ரேல் – ஈரான் யுத்தம் காரணமாக ஆசிய நாடுகள் உள்ளிட்ட உலகளாவிய அளவில் எரிபொருள் நெருக்கடி நிலை உருவாகியுள்ள சூழலில், இலங்கைக்கு 7.5 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான பெற்றோலிய உதவியை வழங்க முன்வந்துள்ள ரஷ்ய கூட்டாட்சி அரசின் நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கதென
நீதிக்கும் சமாதானத்திற்குமான முஸ்லிம் இளைஞர் மன்றம் தெரிவித்துள்ளது.
அமைப்பின் செயலாளர் கலீல் எஸ். முஹம்மது வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
எமது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் இராஜதந்திர முயற்சி காரணமாகவும் இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பினாலும் இவ்விடயம் சாத்தியமாகியுள்ளது.
ரஷ்யாவின் இந்த உதவியானது எமது நாட்டின் தற்போதைய எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதோடு, பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளதுடன் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும், எரிசக்தி துறையில் நிலைத்தன்மை ஏற்படுத்துவதற்கும் முக்கிய பங்களிப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் யுத்த சூழ்நிலை காரணமாக சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விநியோக தடைகள் மற்றும் விலை உயர்வுகள் ஆகியவற்றின் பின்னணியிலும், இலங்கையுடன் கொண்டுள்ள நட்பு மற்றும் நல்லிணக்கத்தை முன்னிறுத்தி ரஷ்யா இத்தகைய உதவியை வழங்க முன்வந்திருப்பது பெரும் வரப்பிரசாதமாகும்.
இந்த நடவடிக்கை, இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களை குறைப்பதோடு, போக்குவரத்து, மின்சாரம் உற்பத்தி மற்றும் தொழில் துறைகளின் தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கும் ஆதரவாக அமையும்- என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.