ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளராக – சாமர சம்பத் தசநாயக்க பதவியேற்பு.!!!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் (SLFP) புதிய தேசிய அமைப்பாளராக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் பொதுச்செயலாளர் நிமால் ஸ்ரீபால டி சில்வா அவர்களிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், சாமர சம்பத் தசநாயக்க இன்று (05) உத்தியோகபூர்வமாக தேசிய அமைப்பாளராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இந்த நிகழ்வு, கொழும்பு ரி.பி. ஜாயா மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது. அங்கு ஒன்றுகூடிய கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் முன்னிலையில், கட்சியின் எதிர்கால அரசியல் நலனை கருத்தில் கொண்டு புதிய தேசிய அமைப்பாளர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மட்டுமன்றி, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதிய நியமனத்தின் மூலம், கட்சியின் அமைப்புசார்ந்த பலத்தை மேலும் வலுப்படுத்தி, எதிர்கால அரசியல் பயணத்தை உறுதிப்படுத்தும் நோக்கம் கொண்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





