நிந்தவூர் பிரதேச சபை பிரதி தவிசாளர் மீது தாக்குதல்: இருவர் கைது – நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 10 பேர் தேடலில்.!!!
நிந்தவூர் பிரதேச சபையினுள் பிரதி தவிசாளர் உட்பட இருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் இந்த மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று (10) உத்தரவிட்டார்.
மேலும், தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 10 பேரை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரியவருவதாவது; நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் அண்மையில் பதவி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதி தவிசாளர் – ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி எம்.ஜே. இர்பான் பொறுப்பேற்று சபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள், பிரதி தவிசாளர் அறையில் நுழைந்து, அவரின் சபை நடவடிக்கைகளை எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் இது நிர்வாக ரீதியான பிரச்சனை என்பதால், தீர்வுக்காக கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற பிரதிப் பணிப்பாளரை அணுகுமாறு அறிவுறுத்தினர். அந்த நால்வரும் பின்னர் அங்கிருந்து வெளியேறினர்.
அதேநாள் பிற்பகல் 2.00 மணியளவில், அந்த விவகாரம் முடிந்த சில மணி நேரங்களிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தலைமையிலான சுமார் 30 பேர் பிரதி தவிசாளர் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, மேசையில் இருந்த ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்களை உடைத்து நொறுக்கினர்.
அத்தகைய சூழலில், பிரதி தவிசாளர் இர்பான் மற்றும் மேலும் ஒருவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாக்குதல் நடத்திய குழுவினர் சம்பவத்தின் பின் தப்பிச் சென்றனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் ஆரம்ப விசாரணையில் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 12 பேரை அடையாளம் கண்டுள்ளனர். இவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் தலைமறைவாகியிருந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த இருவர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். அவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, 24ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவிடப்பட்டது.
மேலும், மீதமுள்ளவர்களை கைது செய்ய மாவட்ட குற்றப் பிரிவு பொலிஸார் நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்ய பாராளுமன்ற சபாநாயகரிடம் அனுமதி பெறும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.