மட்டக்களப்பு மாவட்டத்தில் 250க்கும் மேற்பட்ட தல சீமியா நோயாளர்கள்; சுகாதார அமைச்சினால் விசேட வேலைத்திட்டம்.!!!
(ஜே.கே)
இலங்கையில் சுமார் 2000 பேர் தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டு இரத்த மாற்று சிகிச்சை செய்து வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 250க்கும் மேற்பட்ட தல சீமியா நோயாளர்கள் காணப்படுகின்றனர். இந்நோயைத் தடுக்க சுகாதார அமைச்சு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ் முரளீஸ்வரன் தெரிவித்தார்
இன்று அனுஷ்டிக்கப்படும் சர்வதேச தலசீமியா நோய் தினத்தை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு மாவட்ட தலசீமியா நோய் தடுப்பு பணியகத்தில் இடம்பெற்ற மாவட்டத்திலுள்ள தலசீமியா நோயாளர்களுக்கான பிரயாண கொடுப்பனவு,மற்றும் நிவாரண பொதிகள் வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் அமைந்துள்ள மேற்படி தலசீமியா நிலையத்தில் ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.குணராஜசேகரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட தலசீமியா நோய் தடுப்பு பணிப்பாளர் டாக்டர் இ.உதயகுமார், எகெட் ஹரிதாஸ் நிறுவன மாவட்ட பணிப்பாளர் அருட்தந்தை ஜெயராஜ் தலசீமியா நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் நுஷ்ரத், தாதியர்கள் வைத்தியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட எகெட் ஹரிதாஸ் நிறுவன அனுசரணையுடன் அம்பாறை மற்றும் மாவட்டத்தின் தூர இடங்களில் இருந்து வரும் தலசீமியா நோயாளர்களுக்கு பிரயாண கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டதுடன், தலசீமியா நோயாளர்களுக்கு விஷேட நிவாரணப் பொருள்களும் இங்கு வழங்கி வைக்கப்பட்டன.
தலசீமியா நோயிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பான விழிப்புணர்வு உரைகளும் வைத்தியர்களினால் இங்கு நிகழ்த்தப்பட்டன.



