மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திப் பணிகளை விரைவாக்கவே; புதிய மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார் – கந்தசாமி பிரபு.!!!
மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு அமைச்சரவையின் அனுமதிகள் பெற வேண்டி இருப்பதனாலே வட மாகாணத்தில் இருப்பது போல மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் புதிய மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார் என மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரனுக்கு அவரது அமைச்சின் அதிகரித்த வேலைப்பளுக்கள் மற்றும் திருமலை மாவட்ட அபிவிருத்திப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை நடாத்த வேண்டி இருப்பதனாலும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திப் பணிகளை விரைவாகக் கொண்டு செல்வதற்காகவே புதிய மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி புதிதாக நியமனம் பெற்றுள்ளார்.
எதிர்க்கட்சிகளும் சில விஷமிகளும் இதனை வேண்டுமென்றே ஒரு பொய்யான கருத்துக்களைப் பரப்பி வருகின்ற போதிலும் அவர் மாவட்டத்தை நன்கு அறிந்து பிரதேசத்தில் 10 வருடத்திற்கு மேல் அரசியல் பணிகளை முன்னெடுத்தவர்.
அவரது நியமனம் மூலம் மாவட்டத்திற்கு பல நன்மைகள் எதிர்காலத்தில் கிடைக்கப்பெற உள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.