சமூகத்தை வழி நடத்துகின்ற சிறந்த தலைவர்களாக இளைஞர்கள் மாற வேண்டும்; மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ். பார்த்திபன்.!!!
(ஜே.கே)
“தலைமை நான் – மாற்றம் நம்மால்!” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இளைஞர் யுவதிகளுக்கான ஒரு நாள் தலைமைத்துவ மற்றும் திறன்விருத்தி தொடர்பான பயிற்சி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை ஏறாவூர் 3A சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் அதன் தலைவரும் புள்ளி விபர உத்தியோகத்தருமான எம்எஸ்எம். றூமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
தற்காலத்தில் இளைஞர்களை வழிபடுத்தக் கூடிய இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுவது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது.
இந்த நல்ல சந்தர்ப்பத்தை இதில் கலந்து கொண்டிருக்கின்ற இளைஞர் யுவதிகள் அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்தி எதிர்காலத்தில் சிறந்த தலைவர்களாக வருவதோடு இப்போது இருக்கின்ற தலைமைத்துவ வெற்றிடத்தினையும் நிரப்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
ஏறாவூர் 3A சன சமூக நிலையம் தொடர்ச்சியாக இவ்வாறான நிகழ்வுகளை நடத்தி வருவது பாராட்டத்தக்க விடயமாகும். இதன் நிர்வாகம் நன்கு திட்டமிட்டு இவ்வாறான நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடாத்தி வருவதை போல் ஏனைய சன சமூக நிலையங்களும் முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்
நிகழ்வில் கௌரவ அதிதியாக ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எம்எச்எம்.ஹமீம் அவர்களும் விசேட அதிதியாக சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. ஹாரூன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
பிரதேசத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்ட இப்பயிற்சி நெறியின் பிரதான பயிற்றுவிப்பாளராகவும் வளவாளராகவும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட மத்தியஸ்த பயிற்சி அலுவலரும் சன சமூக நிலையத்தில் செயலாளருமான எம்ஐஎம். ஆஸாத் பங்கெடுத்தார்.
இந் நிகழ்வில் சன சமூக நிலையத்தின் பொருளாளர் எம்ஏசீ எம்.இம்தியாஸ் மற்றும் உப செயலாளர் எஸ்எப்.நதா உட்பட நிர்வாக சபை உறுப்பினர்கள் சங்கத்தின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.



