மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால்; மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்பு.!!!
(ஜே.கே)
இலங்கை தமிழரசுக் கட்சி ஏற்பாடு செய்திருந்த வடகிழக்கு மாகாணம் தழுவிய பூரண ஹர்த்தால் இன்று (18) அனுஷ்டிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் தமிழ் பிரதேசங்களில் இன்று பூரண ஹர்த்தால் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது. மாவட்டத்தின் பல பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள், தனியார் நிறுவனங்கள் என்பன மூடப்பட்டுள்ளன.
வடக்கில் தமிழ் இளைஞர் ஒருவரின் மரணத்திற்கு இலங்கை இராணுவத்தினரே காரணம் என காரணம் காட்டி இலங்கை தமிழரசு கட்சி இராணுவத்தினருக்கு எதிராக குறித்த ஹர்த்தாலை அனுஷ்டித்து வருகிறது.
ஹர்த்தால காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த போதிலும், வாகன போக்குவரத்து இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை முஸ்லிம் பிரதேசங்களில் கடைகள் வழமை போன்று திறந்திருந்ததையும் காண முடிந்தது.
மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரம் உட்பட செங்கலடி, ஆரையம்பதி, வாழைச்சேனை, கொக்கட்டிச்சோலை உட்பட தமிழ் பிரதேசங்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
ஹர்த்தாலை ஒட்டி நகரங்களில் இராணுவத்தினரும் பொலிசாரும் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.















