பொத்துவில் ஜெயிக்கா சுனாமி கிராம வீதிக்கு காபட்: ஆதம்பாவா எம்.பி. ஆரம்பித்து வைப்பு.!!!
(எம்.எஸ்.எம். ஸாகிர்)
சுமார் 20 வருடங்களுக்கு மேலாக செப்பனிடப்படாமல் இருந்த பொத்துவில் ரொட்டை பகுதியில் அமைந்துள்ள ஜெயிக்கா சுனாமி கிராம வீதியை காபட் வீதியாக மாற்றும் பணிகள் நேற்று (14) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் மூலம் சுமார் 2 கோடியே 62 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில், 1200 மீற்றர் நீளமுடைய குறித்த வீதி காபட் வீதியாக செப்பனிடப்படவுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் பொத்துவில் பிரதேச அமைப்பாளர் ஆதம் சலீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியல் பேரவை உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் கலந்து கொண்டு பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் ஏ.சி.எம். நஸீல், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்று – பொத்துவில் பிராந்திய நிறைவேற்று பொறியியலாளர் அப்துல் பாரி, தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினர்களான தோழர் மஹ்ரூப், தோழர் புனீதன், பொத்துவில் பிரதேச பிரஜா சக்தி தலைவர்கள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச செயற்பாட்டாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் உள்ளிட்ட பலரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இத்திட்டம் நிறைவு பெறுவதன் மூலம், நீண்ட காலமாக சீரமைப்பு இல்லாமல் பாதிக்கப்பட்டிருந்த கிராம மக்களின் போக்குவரத்து சிரமங்கள் குறையுமென எதிர்பார்க்கப்படுகிறது.









