டித்வா புயலால் பாதிக்கப்பட்ட கால்நடை பண்ணையாளர்களுக்கு இழப்பீடு: காசோலை வழங்கி வைப்பு.!!!
(எம்.எஸ்.எம். ஸாகிர்)
அண்மையில் ஏற்பட்ட டித்வா (Ditwa) புயலினால் பாதிக்கப்பட்ட கால்நடை உற்பத்தி பண்ணையாளர்களுக்கான அரசாங்கத்தின் இழப்பீடு வழங்கும் நிகழ்வு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுசரணையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் இலங்கை அரசியல் பேரவை உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாக கலந்து கொண்டு அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில் மற்றும் நாவிதன்வெளி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு இழப்பீட்டுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் குறித்த பிரதேசங்களுக்கான கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச அமைப்பாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப், பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் இழப்பீட்டினைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள், தமக்கு இழப்பீடு வழங்கிய அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் நன்றி தெரிவித்தனர்.








