காத்தான்குடியில் மூன்றாவது நாளாக டெங்கு பரிசோதனை – 430 வீடுகளில் சோதனை: 68 வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை.!!!
(B.M. பயாஸ்)
கடந்த சில நாட்களாக பெய்த அடைமழையின் தாக்கத்தால் பல இடங்களில் நீர் தேங்கி நிற்பதால், டெங்கு நோய் பரவல் அபாயம் அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்க பிரதேச சுகாதார வைத்திய அலுவலகம் டெங்கு பரிசோதனை நடவடிக்கையை கடந்த 08.12.2025 முதல் ஆரம்பித்துள்ளது.
முதல் கட்டமாக காத்தான்குடி 162 மற்றும் 162B பகுதிகளில் பரிசோதனைகள் இடம்பெற்றன.
மூன்றாவது நாளான இன்றுவரை மொத்தம் 430 வீடுகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 68 வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டதுடன், 4 வீடுகளுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
டெங்கு நோயால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, ஒவ்வொரு வீட்டுக்கும் வருகை தந்த அதிகாரிகள் விழிப்புணர்வு செயல்பாடுகள், நீர் தேங்குவதைத் தடுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கினர்.
காத்தான்குடி பொது சுகாதார வைத்திய அதிகாரி U.L. நஸீர்தீன் அவர்களின் கண்காணிப்பில், மேற்பார்வை சுகாதார பரிசோதகர் A.M.M. பஸீர் தலைமையிலான குழுவினர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இந்தப் பணியில் காத்தான்குடி பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் பொறுப்பதிகாரி ஜெயசேகர, பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உபதேசக்குழு உறுப்பினர்கள் இணைந்து செயல்பட்டமை குறிப்பிடத்தக்கது.






