டிஜிட்டல் மாற்றம் மற்றும் இணைந்த எதிர்காலம்: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் SEUIARS–2026 சர்வதேச ஆய்வரங்கு.!!!
-நூருல் ஹூதா உமர்-
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசாரப் பீடம் ஏற்பாடு செய்த 12ஆவது சர்வதேச கலை ஆய்வரங்கு (SEUIARS – 2026) 2026 மார்ச் 31 ஆம் தேதி பீடத்தின் கலைத் தியேட்டரில் இடம்பெற்றது.
“Transformation through Digitalization: Pathways to a Connected Future” (டிஜிட்டல் மாற்றம் மூலம் இணைந்த எதிர்காலம்) என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த ஆய்வரங்கு, நவீன டிஜிட்டல் மாற்றங்களையும் கலை ஆராய்ச்சிகளையும் இணைக்கும் சர்வதேச மேடையாக அமைந்தது.
இந்நிகழ்வு, ஒருங்கிணைப்பாளர் கலாநிதி சி.எம்.எம். மன்சூரின் வரவேற்புரையுடன் தொடங்கியது. இந்த ஆய்வரங்கிற்காக தேசிய மற்றும் சர்வதேச அளவில் 160 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அதில் 110 ஆய்வுகள் விவாதத்திற்காக தேர்வு செய்யப்பட்டன.
பின்னர் கலை மற்றும் கலாசாரப் பீடத்தின் பீடாதிபதியும் ஆய்வரங்கின் தலைவருமான பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் உரையாற்றினார். அவர் ஆய்வரங்குகளின் முக்கியத்துவத்தையும், இத்தகைய சர்வதேச நிகழ்வுகள் வழங்கும் கல்வி வாய்ப்புகளையும் வலியுறுத்தினார்.
அடுத்து பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் உரையாற்றி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க வளர்ச்சியில் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பை எடுத்துரைத்தார்.
பின்னர் முக்கிய உரையாளர் அறிமுகத்தை பொருளாளர் திருமதி ஏ.எப். தஹாரா வழங்கினார். அதன் பின்னர் மலேசியாவின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கலாநிதி ஐனோல் மட்ஸியா ப்த். சுபைரி அவர்கள் இணைய வழியாக முக்கிய உரையை வழங்கினார். அவர் தனது உரையில் உலகளாவிய கலை ஆய்வுகளின் தற்போதைய நிலை, கலாசார பரிமாற்றத்தின் அவசியம் மற்றும் எதிர்கால கல்வி ஆராய்ச்சிகள் குறித்து விரிவாக விளக்கினார்.
இந்த ஆய்வரங்கில் பல முக்கிய தலைப்புகளில் கருத்தரங்குகள் இடம்பெற்றன. அவற்றில்:
• டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் புத்தாக்கம்
• டிஜிட்டல் யுகத்தில் சமூகம் மற்றும் கலாசாரம்
• புவியியல் தகவலியல் மற்றும் சுற்றுச்சூழல்
• மொழி, இலக்கியம் மற்றும் பயன்பாட்டு மொழியியல்
• தத்துவம், உளவியல், கல்வி மற்றும் டிஜிட்டல் நலன்
• அரசியல், அமைதி மற்றும் டிஜிட்டல் ஆட்சி
• தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பியல்
• வரலாறு மற்றும் பன்னிருவியல் ஆய்வுகள்
நிகழ்வின் இறுதியில் செயலாளர் கலாநிதி எம்.ஐ.எப். கரீமா நன்றி உரையாற்றி நிகழ்வை நிறைவு செய்தார்.
இந்த சர்வதேச ஆய்வரங்கில் பீடாதிபதிகள், பதிவாளர் எம்.ஐ. நௌபர், நூலகர் எம்.எம். றிபாவுத்தீன், நிதியாளர் சி.எம். வன்னியாராச்சி, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் விரிவுரையாளர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் ஆய்வுகளை பகிர்ந்து கொண்டனர். கலை மற்றும் கலாசார ஆய்வுகளை மேம்படுத்தும் முக்கிய தளமாக இந்நிகழ்வு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




