சாரதி அனுமதிப்பத்திர காலாவதி ஒரு மாதம் நீடிப்பு – அமைச்சரவை தீர்மானம்.!!!
சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் தொடர்பான 2025 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க மோட்டார் வாகன (சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீடித்தல்) கட்டளையை, பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக, சாரதி அனுமதிப்பத்திரங்களை உரிய காலத்தில் புதுப்பித்துக் கொள்வதில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்காலப்பகுதியில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் மற்றும் புதுப்பித்தல் தொடர்பான கணனி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, அந்த சேவைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியாமல் போனதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலைமைகளை கருத்திற் கொண்டு, வீதிப் பாதுகாப்பு அல்லது வீதியைப் பயன்படுத்துவோருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், 2025 நவம்பர் 25 முதல் டிசம்பர் 24 வரை செல்லுபடியாகும் காலம் முடிவடையவிருந்த சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை, அவை காலாவதியாகும் திகதியிலிருந்து ஒரு மாத காலத்திற்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த கட்டளை 2025 டிசம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட 2467/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(203 ஆம் அதிகாரச் சட்டமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க, இக்கட்டளையை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கும் பொருட்டு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.