அம்பாறை – மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு மின்சாரம்; 10 நாட்களின் பின் வழமைக்கு.!!!
மஹியங்கனை ரந்தம்பே பகுதியில் உள்ள அதிவலு மின்கம்பி கட்டமைப்பு வெள்ளப் பேரிடரால் இடிந்து விழுந்ததால், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தது.
நவம்பர் 27ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து, உடனடியாக மின்விநியோக கட்டமைப்பின் மீள நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இன்று (06) சனிக்கிழமை பிற்பகல் முதல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பத்துறையினர், மின்சார இணைப்பை மீள வழங்குவதற்காக இரவு பகலாகப் பணி செய்தனர். இதன் பலனாக இன்று மாலை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மின்சார விநியோகம் முழுமையாக வழமை நிலைக்குத் திரும்பியுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
மின்சாரம் தடையின்றி கிடைப்பதால், அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் மற்றும் தினசரி செயற்பாடுகளை வழக்கம்போல மேற்கொள்ளும் வசதி கிடைத்துள்ளது.
இந்நிலையில் மீட்புப் பணிகளை முன்னெடுத்த மின்சார சபை அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள், மேலும் மின்சார விநியோகத்தை உறுதிசெய்ய வழிகாட்டிய அமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கு பொதுமக்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.