நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய முறைக்கு முற்றுப்புள்ளி; 6 வாரங்களில் சட்டமூலம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க.!!!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறையை இரத்து செய்வதற்கான சட்டமூலம், அடுத்த 6 வாரங்களுக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
அரசியலை இலாபம் ஈட்டும் தொழிலாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதும், பொதுச் சேவையில் நேர்மையும் பொறுப்புணர்வும் நிலைநிறுத்தப்படுவதும் இந்த சட்டமூலத்தின் பிரதான நோக்கமாகும் என அவர் தெரிவித்தார்.
மேலும், கொழும்பில் இதுவரை 4 அமைச்சர்களுக்காக பயன்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள், இனி நீதித்துறை சார்ந்த பணிகளுக்காக ஒதுக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறினார். அரசியல்வாதிகளுக்கான வரப்பிரசாதங்களை குறைத்து, மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
அரசின் இந்த நடவடிக்கைகள், அரசியல் கலாச்சாரத்தில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், மக்கள் எதிர்பார்க்கும் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகிறது.