கிராம உத்தியோகத்தர்களின் போராட்டம் ஒத்திவைப்பு: அரசுடன் பேச்சுவார்த்தைக்கு பிறகு தீர்வு வாக்குறுதி.!!!
2009/2010 ஆம் ஆண்டுகளில் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் குழுவின் தரப் பிரச்சினைகள் தொடர்பாக, மார்ச் 03ஆம் திகதி பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் முன்னால் நடத்த திட்டமிடப்பட்டிருந்த அமைதிப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம், 2009/2010 குழுவைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர்களுக்கும், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர் (உள்நாட்டலுவல்கள்), மேலதிக செயலாளர் (கிராம அலுவலர் நிர்வாகம்), நிறுவனப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில், 2009/2010 கிராம உத்தியோகத்தர்களின் தரப் பிரச்சினைகள் தொடர்பாக விடயப்பொறுப்பு அமைச்சருடன் ஆலோசித்து எதிர்வரும் வாரத்திற்குள் நிலையான தீர்வொன்றை எழுத்துப்பூர்வமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் உறுதியளித்ததாக, ஒன்றியத்தின் ஊடகச் செயலாளர் குமுது வடுமுல்ல தெரிவித்துள்ளார்.
இத்தகைய இணக்கப்பாட்டின் அடிப்படையில் மார்ச் 03ஆம் திகதி நடைபெறவிருந்த அமைதிப் போராட்டம் தற்காலிகமாக இரத்து செய்யப்படுவதாகவும், எதிர்வரும் வாரத்திற்குள் உறுதியான தீர்வு வழங்கப்படாவிட்டால் மார்ச் 16ஆம் திகதி பாரிய எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் கடுமையான தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.