பிரச்சினை இருந்தால் எனக்கே சவால் விடுங்கள்; நோயாளிகளை ஆபத்தில் விடக் கூடாது – சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ.!!!
மருத்துவப் பயிற்சியை (Internship) நிறைவு செய்த வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கும் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு தொடர்பாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த பணிப்புறக்கணிப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எந்த அடிப்படையும் இல்லாத நடவடிக்கையாக இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு எதிராக ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் நேரடியாக தமக்கு சவால் விடலாம் என்றும், ஆனால் அதற்காக நோயாளிகளின் உயிர்களை இதில் சிக்கவைத்து பிணைக்கைதிகளாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் ஏதேனும் சட்டசிக்கல்கள் இருப்பின், நோயாளிகளின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தாமல் நீதிமன்றத்தின் ஊடாக பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டின் சுகாதார சேவைகள் பாதிக்கப்படாத வகையில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.