இலஞ்ச ஊழல் தடுப்பு நிவாரணம் மற்றும் உள்ளக அலுவல்கள் பிரிவு தொடர்பான; அறிமுக பயிற்சி செயலமர்வு.!!!
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மற்றும் பிரதேச செயலகங்கள், அரச நிறுவனங்களில் பணிபுரியும் நிறைவேற்றுத் தர மற்றும் தெரிவு செய்யப்பட்ட அரச அலுவலகங்களுக்கான இலஞ்ச ஊழல் தடுப்பு நிவாரணம் மற்றும் உள்ளக அலுவல்கள் பிரிவுகளின் அறிமுக பயிற்சி நேற்று (04) மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சனி ஸ்ரீகாந்த் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு வளவாளராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் (சட்டம்) சப்றீ சல்டீன் கலந்து கொண்டார்.
இதன் போது உள்ளக அலுவல்கள் பிரிவினை மாவட்ட செயலகங்களில் ஸ்தாபிக்கப்பட்டதன் நோக்கம், நிகழ்நிலை மூலமாக (ஆளிடை தொடர்பை குறைத்தல்) முறைப்பாட்டாளருக்கு 3 நாட்களில் தீர்வினை பெற்றுக் கொடுத்தல், ஊழல் ஒழிப்பு சட்டமும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள், அரச இயந்திரத்தில் இடம்பெறும் இலஞ்ச ஊழல் செயற்பாடுகளை இல்லாதொழிக்கும் செயற்பாடுகள், இலஞ்ச ஊழல் குற்றத்துடன் சம்மந்தப்பட்டவர்களுக்கான தண்டனைகள், தண்டப்பணம் மற்றும் ஊழல் அபாய தேர்வுகளை மதிப்பீடு செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பான தெளிவுபடுத்தல்கள் வளவாளரினால் மேற்கொள்ளப்பட்டது.
இச்செயலமர்வில் உதவிப் பிரதேச செயலாளர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு பயன்பெற்றதுடன், தம்மிடமிருந்த ஐய வினாக்களுக்கான விடைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.
அரசாங்கத்தின் “நேர்மையான தேசத்தை நோக்கிய பயணம்” எனும் திட்டத்தை அமுல்படுத்தும் நோக்கில் இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தல் உள்ளக அலுவல்கள் பிரிவுகளை மாவட்ட செயலகங்களில் நிறுவி அதன் சேவைகள் தற்போது இடம்பெற்று வருவதுடன் எதிர்காலத்தில் குறித்த அலுவலகமானது பிரதேச செயலகங்களிலும் நிறுவப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.