மக்களின் கோரிக்கைக்கு உடனடி தீர்வு; புதிய காத்தான்குடி ரிஸ்வி நகர் வாசிகள் பொலிசாருக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிப்பு.!!!
(B.M. பயாஸ்)
கடந்த நாட்களில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது, புதிய காத்தான்குடி பதுறியா 167A ரிஸ்வி நகர் பகுதியில் பல வீடுகளில் வெள்ள நீர் தேங்கி பொதுமக்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவரும் நேரில் வந்து பார்வையிடவில்லை என்றும், நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டி, அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை 15.12.2025 திங்கட்கிழமை நடத்தவுள்ளதாக காத்தான்குடி பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி A.M.R.N. அழககோன் (IP) அவர்கள் உடனடியாக செயற்பட்டு, சுற்றுச்சூழல் மற்றும் சிவில் பொறுப்பதிகாரியும், பொலிஸ் உப பரிசோதகருமான ஜெயசேகர அவர்களிடம் அப்பகுதிக்கு நேரில் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தீர்வு பெற்றுத்தருமாறு ஆலோசனை வழங்கினார்.
இதன் அடிப்படையில், பொலிஸ் உபதேசக்குழு செயலாளரும் ஊடகவியலாளருமான B.M. பயாஸ், சுற்றுச்சூழல் மற்றும் சிவில் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உப பரிசோதகர் ஜெயசேகர ஆகியோர் அப்பகுதிக்கு நேரில் சென்றனர். அங்கு 200 இற்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்து தங்களது குறைகளை வெளிப்படுத்தினர். பொலிஸ் அதிகாரிகள் மும்முரமாக செயற்பட்டு சம்பந்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுடன் உடனடியாக தொடர்புகளை ஏற்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, பிரதேச செயலக உத்தியோகத்தர் ரசூல்ஷா மற்றும் ஊடகவியலாளர் நூர்தீன் ஆகியோரும் அங்கு வருகை தந்து, மக்களிடம் நிலைமையை தெளிவுபடுத்தினர். சம்பவதினமான 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருந்த போதிலும், மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து, உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா அவர்கள் அப்பகுதி முக்கியஸ்தர்களை பிரதேச செயலகத்திற்கு அழைத்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார். அங்கு மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை பிரதேச செயலாளரிடம் எடுத்துச் சொல்லி தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
இதன் பின்னர், 15.12.2025 திங்கட்கிழமை காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹரா மெளஜூத் மற்றும் உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா ஆகியோர் அப்பகுதிக்கு நேரில் சென்று முழுமையான பார்வையிட்டதுடன், மக்களுக்கு ஆறுதல் கூறி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, புதிய காத்தான்குடி பதுறியா 167A ரிஸ்வி நகர் பகுதி மக்கள், தங்களது பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண முயற்சி மேற்கொண்ட காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சிவில் பொறுப்பதிகாரி, சம்பந்தப்பட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உதவி பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.





