ஹோர்முஸ் நீரிணையை கடக்கும் கப்பல்களுக்கு ஈரான் கோடிக்கணக்கான வரி: உலக எரிசக்தி விநியோகத்தில் அச்சம்.!!!
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகின் முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களுக்கு ஈரான் பல மில்லியன் அமெரிக்க டொலர்களை வரியாக வசூலிக்கத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதன்படி, ஹோர்முஸ் நீரிணையை ஒருமுறை கடக்க ஒவ்வொரு வணிகக் கப்பலும் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை ரூபாயில் சுமார் 60 கோடி) வரை “கடப்பு வரி” செலுத்த வேண்டும் என ஈரான் அறிவித்துள்ளது.
இந்நடவடிக்கை, நாட்டின் இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்கும், போர்க்காலச் செலவுகளை சமாளிப்பதற்குமான முயற்சியாகும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் அலாவுதீன் புருஜெர்டி தெரிவித்துள்ளார். மேலும், இது ஈரானின் அதிகாரத்தையும் வலிமையையும் வெளிப்படுத்தும் நடவடிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளின் கப்பல்களுக்கு இந்த நீரிணையை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய நாடுகளின் கப்பல்கள் ஈரானிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, குறித்த கட்டணத்தைச் செலுத்திய பின்னரே கடப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியா உட்பட பல நாடுகள் சர்வதேச கடல்சார் சட்டங்களின் அடிப்படையில் இத்தகைய கட்டணங்கள் விதிப்பது சட்டவிரோதமானது என எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் சுமார் 20% பங்கை வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையில் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் சர்வதேச சந்தையில் மேலும் உயரக்கூடும் என அச்சம் நிலவுகிறது.
இதற்கிடையில், பெர்சிய வளைகுடா பகுதியில் உள்ள பல எண்ணெய் டாங்கர்கள் இந்த வரியைச் செலுத்துவதா அல்லது மாற்றுப் பாதைகளைத் தேர்வு செய்வதா என்ற குழப்பத்தில் காத்திருக்கின்றன.