தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற குழுத் தலைவர் மாற்றம்: சாணக்கியன் நியமனம், சிறீதரன் நீக்கம்.!!!
இலங்கை தமிழரசுக் கட்சி, தனது புதிய நாடாளுமன்ற குழுத் தலைவராக 35 வயதான மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதுவரை அந்தப் பொறுப்பில் இருந்த மூத்த யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், உள்கட்சி கொள்கைகள் மற்றும் பொறுப்புத்தன்மை தொடர்பான முரண்பாடுகளின் பின்னணியில் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் யாப்புக் கவுன்சிலில் (Constitutional Council) இருந்து விலக மறுத்த சிறீதரனின் நிலைப்பாடே இந்த முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, மூத்த இராணுவ அதிகாரிகளுக்கு ஆதரவளித்ததாக தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
கட்சியின் நீண்டகால நிலைப்பாடுகளுக்கும், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் முரணாக சிறீதரன் செயற்பட்டதாக அரசியல் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, இராணுவ அதிகாரிக்கு வாக்களித்தது தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் அதே நேரம், நீண்ட காலமாக சிறீதரனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்க வேண்டும் என்ற முடிவின் பிரகாரம், தற்போதைய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறீதரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.