காத்தான்குடி பிரதேசத்தை; நகர அபிவிருத்தி அதிகார சபையினுள் உள்வாங்குதல் தொடர்பான – உயர்மட்ட கலந்துரையாடல்.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
கிழக்கு மாகாணத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தரும் சுற்றுலா தளமாக மாறிவரும் காத்தான்குடி பிரதேசத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையினுள் உள்வாங்குதல் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடல் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ் எச் எம். அஸ்பர் தலைமையில் தாருல் அர்க்கம் மண்டபத்தில் இன்று (14) நடைபெற்றது.
நகர அபிவிருத்தி அதிகார சபை கிழக்கு மாகாண பணிப்பாளர் ஜகத் லியனகே பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பணிப்பாளர் எம். நாசர் உட்பட காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள்,
சுற்றுச்சூழல் அதிகார சபை உத்தியோத்தர்கள், கரையோர பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகள், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதிநிதிகள், நகர சபை உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது காத்தான்குடி பிரதேசமானது நகர அபிவிருத்தி அதிகார சபையினுள் உள்வாங்கப்படுமாயின் அதன் மூலம் ஏற்படுகின்ற சாதக, பாதகங்கள் விளாவாரியாக உயர் அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டதோடு, சபையோரினாரினால் கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான தீர்வுகளும், கருத்துக்களும் பகிரப்பட்டது.










