காத்தான்குடி கல்விக்கோட்டத்தில்; ஐந்து பாடசாலைகள் அபிவிருத்திக்காக தெரிவு – சுமார் 13 மில்லியன் நிதி ஒதுக்கீடு.!!!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின்படி, கிழக்கு மாகாண கல்வியமைச்சினால் PSDG (Provincial Specific Development Grant) திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கல்விக்கோட்டத்தின் கீழுள்ள ஐந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் அபிவிருத்திக்காக சுமார் 13 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் விசேட பணிப்பின் பேரில் ஆளுநரின் இணைப்புச் செயலாளர் கே.எம். அப்துல்லாஹ், காத்தான்குடி தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் எஸ்.எம்.ஏ. நஸீர், காத்தான்குடி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளரும் பொதுமக்கள் தொடர்பாடலுக்கான அமைப்பாளருமான எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி மற்றும் காத்தான்குடி செயற்குழு உறுப்பினர் எம். றம்ஸி ஆகியோர் இணைந்து, மேலதிக கண்காணிப்பு விஜயத்தை அண்மையில் மேற்கொண்டனர்.
விஜயத்தின் போது, மேற்படி பாடசாலைகளின் அதிபர்களுடன் சந்தித்து, ஒதுக்கப்பட்ட நிதியை எவ்வாறு வினைத்திறனுடன் பயன்படுத்தலாம் என்பது தொடர்பாக ஆலோசனைகள் பரிமாறப்பட்டன. கல்வி வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் அரசாங்கம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் மூலம் மாணவர்கள் பெறும் கல்வி தரம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.