காத்தான்குடி முஸ்லிம்களின் வரலாற்று ஆவணப்படம்; ‘KillingKilling the Travellers’ காத்தான்குடியில் திரையிடப்பட்டது.!!!
(எம்.பஹத் ஜுனைட்)
1990 காலப்பகுதியில் குருக்கள்மட பகுதியில் வைத்து விடுதலை புலிகளால் கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட காத்தான்குடி முஸ்லிம்களின் வரலாற்று ஆவணப்படமான “குருக்கள் மடம் படுகொலை” ‘Killing the Travellers’ ஞாயிற்றுக் கிழமை (03) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் திரையிடப்பட்டது.
தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் தலைவர் சட்டமாணி இ.எம்.றுஸ்வின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை,
கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவ் ஆவணப் படம் தொடர்பில் உரையாற்றியதுடன் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எம்.சீ.எம்.ஏ. சத்தார்,செயலாளர் அஷ்ஷேய்க் எஸ்.எச்.எம்.றமீஸ் (ஜமாலி), சட்டத்தரணி எம்.உவைஸ், மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் கே.எல்.கலீல்,கலாநிதி சிராஜ் மஸூர், உள வள உத்தியோகத்தர் மஷுர் அபூபக்கர் மற்றும் நகரசபை உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், மண்டம் நிறைந்த பார்வையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
காத்தான்குடி சகோதரர் கலீலுர் றஹ்மான் பாஸிர் தயாரிப்பில் உருவான சர்வதேச தரத்தினாலான “குருக்கள் மடம் படுகொலை” ஆவணப்படம் 1990 காலப்பகுதியில் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றி வருகை தந்த ஹாஜிகள் மற்றும் வியாபாத்திற்கான சென்றுவந்த வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்களை குருக்கள் மடப் பிரதேசத்தில் வைத்து விடுதலை புலிகளால் கடத்தி கொலை செய்த சம்பவங்கள் மற்றும் கிழக்குப்முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், கடத்தல் , மிலேச்சத்தனமான தாக்குதல்கள், படுகொலைகள், கொள்ளைகள் மற்றும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கி இடையிலான உறவுகள் தொடர்பான வரலாற்று ஆவணப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் மற்றும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.








