தலைக்கவசம் அணியாத 55 பேர் காத்தான்குடி பொலிசாரினால் மடக்கிப் பிடிப்பு; சந்தேகத்தில் ஒருவர் கைது.!!!
(ஜே.கே)
புனித ஹஜ்பெருநாள் தினமான இன்று (07) மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரதேசத்தில் இன்று காலை பொலிசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 55 பேர் மடக்கிப் பிடிக்கப்பட்டதுடன் அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.ரத்னாயகா தெரிவித்தார்
தலைக்கவசம் அணியாத மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறித்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை காத்தான்குடி கடற்கரை மற்றும் ஆற்றங்கரை பிரதேசங்களுக்கு பெருநாள் தொழுகைக்காக வருகை தந்த அதிகமான இளைஞர்கள் தலைக்கவசம் அணியாது வருகை தந்திருந்தனர். ஏற்கனவே பொலிசார் தலைக்கவசம் அணியாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்கின்ற அறிவித்தலை விடுத்திருந்த போதிலும் அவற்றை உதாசீனம் செய்து தலைக்கவசம் அணியாது பயணித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிள் செலுத்தக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் விபத்துக்கள் ஏற்படுகின்ற போது மரண சம்பவங்கள் அதிகரிதுள்ளதோடு நேற்றிரவு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில் 21 வயதுடைய வாலிபர் விபத்துக்குள்ளாகி மரணமானது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட தலைக்கவசம் அணியாது கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்