ஐக்கிய அரபு இராச்சியத்தின் முன்னணி வர்த்தகர் எஸ்ஸா அல் குரைர் – புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் வருகை.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
ஐக்கிய அரபு இராச்சியத்தின் முன்னணி வர்த்தகப் பிரமுகரும், வக்ப் குழுமத்தின் தலைவரும், புகழ்பெற்ற Al Ghurair குழுமத்தின் தலைவருமான எஸ்ஸா அல் குரைர் (Essa Al Ghurair) அவர்கள், கலாநிதி அல்-ஹாஜ் முஹம்மத் பசூல் ஜிப்ரி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் ஆகியோரின் விசேட அழைப்பின் பேரில், இன்று (16) புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயலுக்கு (அல் அக்ஸா) வருகை தந்து நேரில் பார்வையிட்டார்.
இவ்வருகையின் போது, பள்ளிவாயலின் தற்போதைய கட்டமைப்பு வசதிகள், தொழுகை மண்டபம், கல்வி மற்றும் சமூக செயற்பாடுகளுக்கான இடங்கள் உள்ளிட்ட பல பகுதிகளை எஸ்ஸா அல் குரைர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
மேலும், எதிர்காலத்தில் பள்ளிவாயலில் முன்னெடுக்கப்படவுள்ள கட்டிட விரிவாக்கத் திட்டங்கள், இளைஞர் மற்றும் சிறுவர் கல்வி நடவடிக்கைகள், சமூக நலச் சேவைகள், மதப் பண்பாட்டை மேம்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பாகவும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. இத்திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்த தேவையான ஒத்துழைப்புகள் மற்றும் ஆதரவுகள் குறித்தும் ஆராயப்பட்டது.
இச்சந்திப்பில், பள்ளிவாயல் சமூகத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் மகல்லாவாசிகளின் தேவைகள் குறித்து பள்ளிவாயல் நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்வில் பள்ளிவாயல் நிர்வாகிகள், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மகல்லாவாசிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
















