உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு; காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கெளரவம் – சில உறுப்பினர்கள் அதிருப்தி.!!!
(எம்.பஹத் ஜுனைட்)
கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் காத்தான்குடி நகர சபை, மண்முனைப்பற்று பிரதேச சபை, மட்டக்களப்பு மாநகர சபை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று (05) சம்மேளன கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
சம்மேளனத்தின் பதில் தலைவர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் . காத்தான்குடி நகர சபை மண்முனைப் பற்று பிரதேச சபை மட்டக்களப்பு மாநகர சபை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் உறுப்பினர்கள் வரவேற்கப்பட்டனர்.
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் மௌலவி அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.றமீஸ் ஹாபிழ் (ஜமாலி) அவாகளின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சம்மேளனத்தினால் காத்தான்குடி நகர சபை தவிசாளர், பிரதி தவிசாளர், உறுப்பினர்களுக்கு பொதுவாக வழங்கப்பட்ட நினைவுச் சின்னத்தினை காத்தான்குடி நகர சபை தவிசாளார் எஸ்.எச்.எம்.அஸ்பர் பெற்றுக்கொண்டார்.
இதன் போது வழங்கப்பட்ட நினைவு சின்னத்தில் மண்முனைப்பற்று பிரதேச சபை, மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் உள்வாங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்ட ஒரு சபைக்கோ அல்லது சிலருக்கு வழங்கபட்ட கெளரவம் என இரு உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் காத்தான்குடி நகரசபை யின் உறுப்பினர்கள் சிலரும் அதிருப்தியை வெளியிட்டனர்.