இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி பெரும் நிதி உதவி – 200 மில்லியன் உடனடியாக வழங்க ஒப்புதல்.!!!
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் (ADB) இந்த ஆண்டிற்காக இலங்கைக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்டிருந்த 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, 480 மில்லியன் டொலர் வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலவும் அவசர சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அதில் 200 மில்லியன் டொலர்களை உடனடியாக வழங்கவும் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ கண்டா தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தபோது அறிவிக்கப்பட்டது.
இச்சந்திப்பின் போது, இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான ஒத்துழைப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக ‘டித்வா’ சூறாவளி அனர்த்தத்திற்குப் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த ஆசிய அபிவிருத்தி வங்கித் தலைவர், பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாராட்டியதுடன், அனர்த்தத்தால் சேதமடைந்த உட்கட்டமைப்புகளை மீளமைக்கும் பணிகளுக்கு தேவையான முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டதாகக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக மத்திய மலைநாட்டு நீர்வள கட்டமைப்புகளைப் பாதுகாக்கவும், எதிர்காலத்தில் இத்தகைய அனர்த்தங்களைத் தவிர்க்கவும் தேவையான திட்டங்களுக்கு ஆதரவு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இந்த சந்திப்பில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் நாயகம் சோனா சிரேஸ்தா, பிரதம ஆலோசகர் கெயிச்சிரோ இனுய், சிரேஷ்ட ஆலோசகர் மனிஷா பிரதானாங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.







