மருந்து கொள்வனவில் பாரிய மோசடி; கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.!!!
கொழும்பு நிரந்தர மூவர் நீதிமன்றில் இன்று (26) முறைகேடான ஆன்டிபயடிக் மருந்து கொள்முதல் விவகாரம் தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக அரசாங்க தரப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு இன்று (26) கொழும்பு நிரந்தர மூவர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 13 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளின்படி, ஹ்யூமன் இம்யூனோகுளோபுலின் மற்றும் ரிடொக்ஸிமாப் (Rituximab) எனப்படும் மருந்துகள் இல்லாத வேறு பொருட்களைக் கொண்ட 6,195 குப்பிகளை சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவுக்கு வழங்கி, இலங்கை அரசின் 144.4 மில்லியன் ரூபா நிதியை மோசடியாக தவறாகப் பயன்படுத்தியதாகவும், இதற்காக சதி செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்காக சுமார் 350 சாட்சிகளும், 300-க்கும் மேற்பட்ட வழக்கு ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.