நெல்லிக்காடு கொலைச் சம்பவத்தின்: பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது.!!!
மட்டக்களப்பு மாவட்டத்தை உலுக்கிய நெல்லிக்காடு கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி ஒருவர் கொழும்பு – வத்தளை பகுதியில் வைத்து நேற்று (30) பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து வவுணதீவு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். அதே கிணற்றிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட 40 வயதுடைய பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மேலும், குறித்த இளம் தாயின் மூன்று வயது சிறுமியும் வயல் பகுதியில் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்த வவுணதீவு பொலிஸார், 24 மணித்தியாலங்களுக்குள் காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் உட்பட ஐந்து பேரை கைது செய்திருந்தனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கிய நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் மயக்க மருந்துகளை வழங்கியதாகக் கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், விசாரணைகளின் போது குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார், முச்சக்கர வண்டிகள் மற்றும் சில ஆயுதங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், இச்சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்ட பிரதான சூத்திரதாரியாக ‘சிவா’ என அழைக்கப்படும் திவாகரன் (49) என்ற மருந்து ஏஜென்ட் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வத்தளை பகுதியைச் சேர்ந்த இவர் கொள்ளையர்களுக்கு மயக்க மருந்துகளை வழங்கியதுடன், அவர்களை இயக்கி வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த நபரை நேற்று இரவு வத்தளை பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்களப்பிற்கு அழைத்து வந்துள்ளனர்.
கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வர்ண ஜயசுந்தராவின் வழிகாட்டலின் கீழ், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் கண்காணிப்பில், கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான விசேட குழுவினர் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.