2027 வரை எந்தவொரு கொடுப்பனவும் அதிகரிக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி திட்டவட்ட அறிவிப்பு.!!!
யார் எத்தகைய போராட்டங்களை முன்னெடுத்தாலும், 2027 ஆம் ஆண்டு சம்பள உயர்வு வழங்கப்படும் வரை, வேறு எந்தவொரு கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றும் கண்டி மாவட்ட வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த அனர்த்தத்தினால் எமது பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என பலர் நினைத்தார்கள். ஆனால் இரண்டு மாதங்களுக்குள் நாங்கள் ஒட்டுமொத்தமாக இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளோம். இது அரசாங்கத்தின் திடமான நடவடிக்கைகளின் விளைவாகும்,” எனக் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்,
“சட்டத்தின் ஒரு கோடு உள்ளது. அந்தக் கோட்டிற்குக் கீழேதான் அனைவரும் உள்ளனர். யாரும் சட்டத்தின் கோட்டிற்கு மேலே பாய முடியாது. அப்படியான ஒரு நாடுதான் எமக்குத் தேவை. அதனை நாங்கள் மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த மாற்றம் சிலருக்கு வலிக்கிறது. குறிப்பாக தவறு செய்பவர்களுக்கு இந்த மாற்றம் வலிக்கிறது,” என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை விரைவாக இயல்பு நிலைக்கு கொண்டு வர அரசாங்கம் முன்னுரிமை வழங்கி செயல்பட்டு வருவதாகவும், மீள்குடியேற்ற நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.