நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலைய உள்ளக வீதி: அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்.!!!
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
கற்பிட்டி நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்தின் உள்ளக வீதிகளை காபட் இடும் அபிவிருத்தி பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
கற்பிட்டி பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ், ரூ. 4,720,000 நிதி ஒதுக்கீட்டில் இந்த வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறித்த அபிவிருத்தி வேலைத்திட்டம், கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளரின் நேரடி கண்காணிப்பின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்களின் நீண்டகால தேவைகளை கருத்தில் கொண்டு, முறையான திட்டமிடலுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளின் தொடர்ச்சியாகவே இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சபை தெரிவித்துள்ளது.
மேலும், மக்களிடமிருந்து பெறப்படும் வரிப்பணத்தை முறையான நிர்வாகத்தின் ஊடாக, மக்களுக்கே பயனுள்ளதாக மாற்றியமைப்பதில் அரசு உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்கதாக, 2001 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட கற்பிட்டி நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்தில், கடந்த 25 ஆண்டுகளாக உள்ளக வீதிகள் எவ்வித புனரமைப்பும் இன்றி காணப்பட்டு வந்தமை இங்கு நினைவுகூரத்தக்கதாகும்.



