மஜ்மா நகர் மையவாடியின்; ஒவ்வொருவரது நினைவையும் காக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும் – தவிசாளர் பைரூஸ்.!!!
கொவிட்-19 பெருந்தொற்றின் போது அனைத்து இன மக்களினதும் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க மஜ்மா நகர் விஷேட மையவாடியை ஓட்டமாவடி பிரதேச சபை கௌரவ தவிசாளர் எம்.எச்.எம்.பைரூஸ் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த மையவாடி, பெருந்தொற்றின் போது சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் சம உரிமை வழங்கிய இடமாக, மனிதாபிமான வரலாற்றின் முக்கிய பக்கமாக காணப்படுகிறது. கொவிட் பெருந்தொற்றின் கடுமையான சூழ்நிலையில் உயிரிழந்தவர்களை மதிப்புடன் நல்லடக்கம் செய்ததற்கான சாட்சி இவ்விடம் ஆகும்.
பார்வையிடலின்போது, மையவாடி பகுதிகளில் சில சீர்திருத்த தேவைகள் இருப்பதை கவனித்த கௌரவ தவிசாளர், உடனடியாக சுற்றுச்சூழலை சுத்தம் செய்யும் பணிகளை துவங்குவதற்கான உத்தரவை வழங்கினார்.
மையவாடியின் பரப்பளவு 10 ஏக்கர் காணியாகும். இந்த பரந்த நிலப்பரப்பில் போடப்பட்டுள்ள அடையாளக் கட்டைகள் சேதமடைந்து இருப்பது காணக்கிடைத்து. சேதமடைந்த அடையாள கட்டைகளை உடனடியாக மாற்றம் செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. ஒவ்வொருவரது நினைவையும் காக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த மையவாடியை யானைவேலிட்டு, சுற்றும் மதில்கள் அமைத்துத் பாதுகாப்பது அவசியம் எனவும், இது அனைவரும் மதிக்க வேண்டிய பொது சொத்தாகவும் காணப்பட வேண்டும் எனவும் கௌரவ தவிசாளர் வலியுறுத்தினார்.
“இந்த மையவாடி கடந்த கால நிகழ்வுகளின் சாட்சியாக மட்டுமல்ல, எதிர்கால தலைமுறைகளுக்கு ஒரு நினைவிடம். இதனை பாதுகாக்கவும், பராமரிக்கவும் பொது மக்களும், தனியாரும் இணைந்து செயற்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.
மேலும், பசுமை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் செயற்பாடுகள், நீர் வசதி, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகள் இந்தப் பகுதியில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.