பூநொச்சிமுனை சாரா ஓடையில் சுற்றுலா பயணிகளுக்கான மிதக்கும் படகு சேவை ஆரம்பம்.!!!
(ஆதிப் அஹமட்)
மட்டக்களப்பு நகரின் தெற்கிலும் காத்தான்குடி நகரினை வடக்கு எல்லையாகவும் கொண்ட கடலோர கிராமம் பூநொச்சிமுனையாகும்.
இக்கிராமம் வரலாற்று தொன்மை மிக்க பிரதேசமாகும். ஏனெனில், மட்டக்களப்புக்கு அரேபியர்கள் வருகை தந்த முதல் வருகை தளம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கிராமத்தில் கடலோரமாகவுள்ள சாரா ஓடை எனும் நீர் ஏரியும் அதனைச்சூழவுள்ள இயற்கை அமைப்பும் சுற்றுலாத்துறைக்கான சிறந்த பிரதேசமாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றுலா மேம்பாட்டு ஆய்வின் மூலம் சிபார்சு செய்யப்பட்டுள்ளது.
இந்தப்பிரதேசத்தில் இயற்கையோடு இணைந்த சுற்றுலாத்துறை (ECO TOURISM) தொழிலினை விருத்தி செய்வதனூடாக உள்ளூர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்து அதன் மூலம் உள்ளூர் மக்களின் பொருளாதார மேம்பாட்டினை ஏற்படுத்த முடியும்.
இச்சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் ஓரங்கமாக நேற்று (01) மிதக்கும் படகுச் சேவை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கான நிதியொதுக்கீட்டினை முன்னாள் சுற்றாடல் அமைச்சராகவும் வடமேல் மாகாண ஆளுநராகவும் இருந்த அல் ஹாபிஸ் ZA நசீர் அஹமத் அவர்களினால் கடந்த 2024ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிகழ்விற்கு விருந்தினர்களாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவபீடத்தின் பீடாதிபதி கலாநிதி AMM. முஸ்தபா, மட்டக்களப்பு மாவட்ட கரையோரம் பேணல் திணைக்களத்தின் மாவட்ட பொறியியலாளர் M.துளசிதாசன், அவரது சக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பூநொச்சிமுனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகிகள், மீனவர் சங்கங்களில் நிர்வாகிகள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இச்சேவையானது வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் நடைபெறும். ஏனைய நாட்களில் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் வழங்கப்படுமென செயற்பாட்டாளர்கள் அறியத்தந்தார்கள்.
இதன் மூலம் காத்தான்குடி நகரையும் அதனை அன்மித்த பிரதேசங்களிலும் தற்போது ஏற்பட்டு வரும் சுற்றுலாத்துறை விருத்திக்கு மேலும் வலுச்சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதேவேளை இங்கு இப்படகு சேவையோடு இணைந்ததாக கடல் பிரதேசத்திற்கான இயந்திர படகு சேவை ஒன்றும் ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்த படகு சேவை மூலம் ஆழ்கடலுக்கு சென்று திமிங்கிலம் டால்பின் போன்ற மீன்களை பார்வையிடுவதுடன் மீன்பிடியிலும் ஈடுபட முடியும்.
எதிர்காலத்தில் பிரதேசத்தில் இயற்கையோடு இணைந்த சுற்றுலா(ECO TOURISM ) துறையின் மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு சுற்றுலாத் துறையில் முதலீடு செய்ய விரும்பும் அமைப்புகளோ தனி நபர்களோ இதன் பிரதான செயற்பாட்டாளர் அல் பரக்கத் கிராமிய கடல் தொழில் அமைப்பின் செயலாளரும் சமூக செயற்பாட்டாளருமானஆதம் எஹ்யா அவர்களை தொடர்பு கொண்டால் அதற்கான வழிகாட்டல்களையும் ஒத்துழைப்புகளையும் வழங்கவும் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்கள்.


