மாகாண சபைத் தேர்தல் விவகாரம்: உயர்மட்ட குழுவுடன் ஜெனீவா பயணம்.!!!
மாகாண சபைத் தேர்தல், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரம், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உட்பட தேசிய நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான பூரண விளக்கத்துடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான சிறப்பு உயர்மட்ட இராஜதந்திரிகள் குழு, எதிர்வரும் ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்து கொள்ள தயாராகி வருகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர், எதிர்வரும் 23 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாக உள்ளது. இதில் பங்கேற்க இலங்கையின் உயர்மட்ட இராஜதந்திரிகள் குழு ஜெனீவாவுக்கு செல்ல உள்ளது.
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகள்
இதன் போது, இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை ஜெனீவா செல்லுவதற்கு முன்னர் நிறைவேற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைப்பு?
மறுபுறம், தேசிய மற்றும் சர்வதேச சமூகத்தினால் வலியுறுத்தப்படும் மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்க அரசாங்கம் ஆர்வம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் முறைமை மாற்றங்கள் மற்றும் புலம்பெயர் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு, மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் ஆணைக்குழுவின் நிலை
இந்நிலையில், நீண்ட காலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக வழிகாட்டுதல் கோரி தேர்தல் ஆணைக்குழு, ஜனாதிபதி செயலகத்திற்கு பல கடிதங்களை அனுப்பியுள்ளதாகவும், ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவால் தற்போது எதுவும் செய்ய முடியாத நிலை காணப்படுவதுடன், தேர்தல் குறித்து இறுதி முடிவு சட்டத் திருத்தங்களை சார்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத் தெரிவுக் குழு
இவ்விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தாலும், அதற்கான அரசாங்கப் பிரதிநிதிகள் இன்னும் நியமிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சூழ்நிலையிலேயே, மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஜெனீவாவில் அரசாங்கம் தெளிவுப்படுத்த உள்ளமை அரசியல் வட்டாரங்களில் முக்கியமாகக் கருதப்படுகிறது.