வெளிநாடுகளில் மறைந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் 95 பேருக்கு சிவப்பு அறிவிப்பு: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.!!!
வெளிநாடுகளில் மறைந்து இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் 95 பேருக்கு எதிராக சிவப்பு அறிவிப்புகள் (Red Notices) பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான வுட்லர் இன்று (16) தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், கடந்த இரண்டு ஆண்டுகளின் காலப்பகுதியில் நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் 21 சந்தேக நபர்கள் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், நாட்டிற்கு வெளியே இருந்து இணைய வழி குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களை மேற்கொண்டு வரும் பலரை பொலிஸார் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளதாகவும், அதனடிப்படையில் தற்போது வரை 95 சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் விளைவாகவே, இன்று மூன்று சந்தேக நபர்களை வெற்றிகரமாக இலங்கைக்கு அழைத்து வர முடிந்ததாகவும், குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு, அபுதாபி சர்வதேச பொலிஸ், டுபாய் பொலிஸ் மற்றும் சம்பந்தப்பட்ட தூதரகங்களின் ஆதரவுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் சர்வதேச குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் காலத்திலும் தீவிரப்படுத்தப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.