காத்தான்குடியில் பேரிடரால் பாதிக்கப்பட்ட ; 1000 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் கையளிப்பு.!!!
(எம். ரி.எம்.யூனுஸ்)
பேரிடர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட காத்தான்குடி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மெளஜூத் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (13) சம்மேளன கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 1000 குடும்பங்களுக்கு தலா ரூ. 5,000 பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் எம்.சி.எம்.ஏ. சத்தார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மெளஜூத், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ். எச். எம். அஸ்பர், உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா, அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா காத்தான்குடி கிளை தலைவர் அஷ்ஷேய்க் ஹாரூன் (ரஷாதி), சம்மேளன உறுப்பினர்கள் மற்றும் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டதாகவும், எதிர்காலத்திலும் இதுபோன்ற மனிதாபிமான உதவித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.













