மட்டக்களப்பை உலுக்கிய சம்பவம்: 24 மணித்தியாலத்திற்குள் கொலையாளிகள் கூண்டோடு கைது.!!!
மட்டக்களப்பு – தாந்தாமலை, நெல்லிக்காடு வயல் பகுதியில் அமைந்துள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தொடர்பில், 24 மணித்தியாலங்களுக்குள் துரிதமாக செயல்பட்ட பொலிஸார் மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின் போது, காஞ்சிரங்குடா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மற்றும் ஒரு இளைஞன் (கணவன், மனைவி மற்றும் கணவனின் தம்பி) ஆகியோர் நேற்று (21) இரவு வவுணதீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, கடந்த வியாழக்கிழமை வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகரத்திற்கு 2½ வயது குழந்தையுடன் பயணம் செய்த இளம் தாய் கடத்தப்பட்டுள்ளார். அவருக்கு பழச்சாற்றில் மயக்கமருந்து கலந்து வழங்கப்பட்டு, நகைகள் அபகரிக்கப்பட்டதுடன், குழந்தை வயல்வெளிக்குள் வீசப்பட்டு, பின்னர் தாயை கிணற்றுக்குள் தள்ளியதாக தெரியவந்துள்ளது.
மேலும், இதே முறையில் மற்றொரு பெண்ணும் கிணற்றுக்குள் தள்ளப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும், அந்த பெண்ணின் சடலம் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.