கோட்டை–கொம்பனித் தெரு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு: ரூ.3.2 பில்லியன் புதிய மேம்பாலம் திறப்பு.!!!
கொழும்பு கோட்டை மற்றும் கொம்பனித் தெரு (Slave Island) பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், ரூ. 3.2 பில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்காக நேற்று திறந்துவைக்கப்பட்டது.
இந்த மேம்பாலம் அமைப்பதற்கான தீர்மானம் முதன்முதலில் 1990 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இதற்கான கட்டுமானப் பணிகள் 2021 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன. எனினும், நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இப்பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டன. பின்னர், கடந்த ஆண்டு மே மாதம் புதிய அரசாங்கத்தின் தலையீட்டுடன் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் தற்போது வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
320 மீட்டர் நீளமும், 11 மீட்டர் அகலமும் கொண்ட இந்த மேம்பாலம், கோட்டை மற்றும் கொம்பனித் தெரு பகுதிகளுக்கிடையிலான போக்குவரத்து நெரிசலை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும், துறைமுகச் சரக்குகளை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் தாமரைத் தடாகம் (Lotus Roundabout) சுற்றுவட்டப் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதிலும் இந்த மேம்பாலம் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கோட்டைப் பகுதிக்குச் செல்வோர் தினசரி எதிர்நோக்கும் நீண்ட நேர விரயத்தை குறைப்பதற்கான ஒரு முக்கிய தீர்வாக இந்த மேம்பாலம் அமையும் என போக்குவரத்து நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.











