மின்சார சபை மறுசீரமைப்புக்கு எதிராக கடும் எச்சரிக்கை: முன்னறிவிப்பின்றி நாடளாவிய வேலை நிறுத்தம்.!!!
நாடளாவிய ரீதியில் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் கீழ், மின்சாரசபை ஊழியர்களின் உரிமைகள் தொடர்பில் இதுவரை வலுசக்தி அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றம்சாட்டிய தொழிற்சங்கங்கள், இதனை எதிர்த்து தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு செல்லத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட இலங்கை மின்சாரசபை சுதந்திர சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்த,
“இலங்கை மின்சாரசபையை முற்றாக நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திடுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக எமக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன. மின்சாரசபை சட்டத்திலும், உயர்நீதிமன்ற உத்தரவிலும், இவ்வாறான நடவடிக்கைகளுக்கு முன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
எனவே, குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதை உடனடியாக ஒத்திவைக்குமாறு வலுசக்தி அமைச்சரையும் அரசாங்கத்தையும் வலியுறுத்துகின்றோம். கடந்த வாரம் இது தொடர்பாக எட்டு காரணிகளை முன்வைத்து வலுசக்தி அமைச்சருக்கு எழுத்து மூல கோரிக்கையொன்றை கையளித்துள்ளோம்.
ஆனால் இதுவரை அமைச்சரிடமிருந்து எந்தவொரு பதிலும் எமக்கு கிடைக்கவில்லை. எம்முடன் கலந்தாலோசனை மேற்கொள்ளாமல் ஏதேனும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றோம்” என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, பொறியியலாளர் சங்கம், தொழில்நுட்ப பொறியியலாளர் மற்றும் அதிகாரிகளின் சங்கம், தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம், போக்குவரத்து ஊழியர் சங்கம், அலுவலக சேவை சங்கம், சுயாதீன அலுவலக ஊழியர் சங்கம், சுதந்திர ஊழியர் சங்கம், தேசிய ஊழியர் சங்கம், கூட்டு மின்சார சங்கம், ஐக்கிய ஊழியர் சங்கம், பதவிநிலை ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் சங்கம், நுகர்வோர் ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் சங்கம், களஞ்சியப் பொறுப்பதிகாரிகள் சங்கம், வழங்கல் உத்தியோகத்தர்கள் சங்கம், காசாளர் (பணப் பொறுப்பு) உத்தியோகத்தர்கள் சங்கம், கணக்கு உதவியாளர்கள் சங்கம், வயரிங் செய்பவர்கள் மற்றும் தொழிநுட்ப ஊழியர் சங்கம், உள்ளக தணிக்கை உத்தியோகத்தர்கள் சங்கம், விசாரணை உத்தியோகத்தர்கள் சங்கம், வரைவாளர் சங்கம், சுருக்கெழுத்தாளர் மற்றும் தட்டச்சாளர் சங்கம், கட்டுப்பாட்டு அறை இயக்குநர்கள் சங்கம், அழைப்பு மைய இயக்குநர்கள் சங்கம், பாதுகாப்பு வலுவூட்டல் மன்றம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவித்துள்ளன.
மின்சாரசபை ஊழியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படாவிட்டால், நாட்டின் மின்சார விநியோக நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.