காத்தான்குடியில் சொகுசு பஸ்கள் தடுப்புச் சோதனை: விதிமீறிய சாரதிகள் மீது வழக்கு.!!!
சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில், கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் விசேட பணிப்புரையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் ஆலோசனையின்படி, காத்தான்குடியில் திங்கட்கிழமை (30) இரவு சொகுசு பஸ்கள் மீது திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கல்முனை பிரதான வீதியில், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ்கள் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது, ஆசனப்பட்டி அணியாததும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் ஓட்டியதும் உள்ளிட்ட பல விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி. அழககோன் தெரிவித்தார்.
குறித்த சாரதிகளுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சோதனை நடவடிக்கைகள் இரவு 09 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை காத்தான்குடி பொலிஸ் நிலையம் முன்பாக நடைபெற்றது
கல்முனை, அக்கரைப்பற்று, மருதமுனை மற்றும் காத்தான்குடி பகுதிகளிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் சொகுசு பஸ்களே இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்டன. இந்த நடவடிக்கைகள் மூலம் போக்குவரத்து ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


