தீவிர சிகிச்சையிலும்; விபத்தில் பலியான மகனை – இறுதியாக பார்க்க வந்த தந்தை.!!!
மன்னார் – நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் வியாழக்கிழமை (10) மாலை இடம் பெற்ற விபத்தின் போது உயிரிழந்த மகனின் உடலை, அதே விபத்தில் படுகாயம் அடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த சிறுவனின் தந்தை இறுதியாகப் பார்க்கும் புகைப்படம் வெளியாகி பலரையும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மகனை இறுதியாக பார்க்க வந்த தந்தை
மன்னார் – நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய 04 பேரும் வியாழக்கிழமை (10) மாலை நானாட்டான் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது நானாட்டான் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய 04 பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர். எனினும், பலத்த காயங்களுக்கு உள்ளான 04 வயதுடைய சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், பலத்த காயமடைந்த தந்தை, தாய் மற்றும் 12 வயதுடைய சிறுமி ஆகிய மூவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த 12 வயதுடைய சிறுமி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த 04 வயதுடைய சிறுவன் உயிரிழந்த சம்பவம் தந்தைக்கு தெரியாத நிலையில் நேற்றைய தினம் (11) தனது மகன் இறந்த செய்தியை தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பலத்த காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் தந்தை எழுந்து நடக்க முடியாத நிலையில் தனது 04 வயதுடைய மகனுக்கு வைத்தியசாலையில் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. உயிரிழந்த சிறுவனின் சடலம் இறுதிக் கிரியைகளுக்காக உறவினர்களிடம் கையளிப்பதற்கு முன்னர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தந்தைக்கு காண்பிக்கப்பட்ட நிலையில், தனது மகனின் உடலை தடவி குறித்த தந்தை அஞ்சலி செலுத்தினார்.
அவர் அஞ்சலி செலுத்தும் குறித்த புகைப்படம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.