ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் தணிவு: பிரான்ஸ், பிலிப்பைன்ஸ் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி.!!!
மத்திய கிழக்கில் நீடித்து வரும் அரசியல் மற்றும் இராணுவ பதற்றங்களுக்கு மத்தியில், உலகின் மிக முக்கியமான எரிசக்தி கடல்சார் வழித்தடமாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
நீரிணை மூடப்பட்டதற்குப் பின்னர் முதல் முறையாக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு சரக்குக் கப்பல் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்க ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடான பிரான்ஸை, ஈரான் தனது நேரடி எதிரி நாடாகக் கருதவில்லை என்பதற்கான ஒரு அறிகுறியாக இந்த அனுமதி பார்க்கப்படுகிறது என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பிராந்திய பாதுகாப்பு தொடர்பான பிரான்ஸின் நிலைப்பாட்டை ஈரான் மறைமுகமாக அங்கீகரித்துள்ளதாகவும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
இதேவேளை, பிலிப்பைன்ஸ் நாட்டுடனான பேச்சுவார்த்தைகளும் சாதகமாக முடிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சர் தெரசா லாசரோ மற்றும் ஈரான் அதிகாரிகள் இடையே இடம்பெற்ற கலந்துரையாடல் பயனுள்ளதாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில்,
பிலிப்பைன்ஸ் கொடியுடன் பயணிக்கும் கப்பல்கள் தடையின்றி ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், எரிசக்தி வளங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், பிலிப்பைன்ஸ் மாலுமிகளின் பாதுகாப்பான பயணத்திற்கும் ஈரான் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகின் முக்கியமான எரிசக்தி கடல்சார் வழித்தடமாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையில், சில நாடுகளுக்கு ஈரான் வழங்கியுள்ள இந்த அனுமதி சர்வதேச கடல்சார் வர்த்தகத்திலும், பிராந்திய அரசியல் சூழலிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
